“ஐனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியாகிய பின்னரே எந்த வேட்பாளரை ஆதரிப்பது எனத் தமிழரசுக் கட்சி முடிவெடுக்கும்” என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
“ஜனாதிபதித் தேர்தல் குறித்து எங்களுடைய கட்சியின் மத்திய செயற்குழு கடந்த வாரம் கூடிப் பேசியபோது தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் உரிய நேரத்திலே அது சம்பந்தமான முடிவை நாங்கள் எடுப்பதாகவே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களினதும் தேர்தல் அறிக்கைகளைப் பார்த்துவிட்டு அதன் பின்பு சரியான தீர்மானம் எடுக்கப்படும்.
பிரதான வேட்பாளர்களாகக் கருதப்படும் ரணில், சஜித், அநுர மூவரையும் நாங்கள் சம தூரத்தில் வைத்துப் பார்த்துச் செயற்படுவோம் என்ற தீர்மானத்தை எடுத்திருக்கின்றோம்.
குறிப்பாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணம் வந்தபோது அவரது கூட்டத்தில் பங்குபற்றியிருந்தேன். அதன்போது அவரோடும் பேசியிருந்தேன். ரணில் விக்கிரமசிங்க இங்கு வந்த போதும் கூட அரச நிகழ்வுகளிலே நாங்கள் பங்குபற்றியிருக்கின்றோம்.
இப்படி அனைவரையும் சந்தித்துப் பொது வெளியிலே உரையாடி வெளிப்படைத் தன்மையோடு மக்களிடத்தே நாங்கள் நடாத்திய உரையாடல்களையும் தெரிவித்து மக்களுடன் கலந்தாலோசித்து சரியான தீர்மானத்தை நாங்கள் எடுப்போம் என்பதையும் உறுதியாகச் சொல்லி வைக்க விரும்புகிறோம்.” – என்றார்.