“தமது ஆட்சியில் மதங்களுக்கிடையிலான சுதந்திரம் பேணப்படும்”என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
குறித்த சந்திப்பினையடுத்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அநுர மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
“அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினரை சந்தித்திருந்தோம். நாட்டின் அரசியல் நிலவரம் தொடர்பாகவும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் நாம் கலந்துரையாடினோம்.
நாட்டில் இன்று பலர் மதங்களுக்கிடையில் முறுகல் ஏற்படும் வகையில் போலி பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர் தேசிய மக்கள் சக்தி தொடர்பாக இவ்வாறு விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக முஸ்லிம் மற்றும் பௌத்த மக்கள் மத்தியிலேயே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர்.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மதநல்லிணக்கம் மதங்களுக்கிடையிலான சுதந்திரம் பேணப்படும் . இந்த நாட்டில் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நாம் இடமளிக்கமாட்டோம்.
நாட்டில் அனைத்து இனமக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்படும்” என்றார்.