யாழ்ப்பாணம் – கல்லூண்டாய் குடியேற்றத்திட்டப் பகுதியில் அப்பகுதி மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (21) முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
“கல்லுண்டாய் குடியேற்றத்திட்ட பகுதியில் J /135, J /136 என இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. ஆனால் மொத்தமாக 88 குடும்பங்கள் தான் வசிக்கின்றன. J /135 கிராம சேவகர் பிரிவில் சுமார் 27 குடும்பங்கள் தான் உள்ளன. ஏனையோர் J /136 கிராம சேவகர் பிரிவில் தான் உள்ளனர்.
இந்த கட்டடம் யாருக்காக, எந்த நோக்கத்திற்காக, எந்த நிர்வாகத்தின் கீழ் கட்டப்படுகின்றது என்ற எதுவும் எமக்கு தெரியாது. இதுகுறித்து கிராம சேவகரை கேட்டபோது, அது சம்பந்தமான எந்தவொரு உத்தியோகபூர்வ தகவலும் தனக்கு வழங்கப்படவில்லை என கூறுகிறார்.
சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரே இதில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகின்றார். கிராம சேவகரா? சமுர்த்தி உத்தியோகத்தரா? என்ற குழப்பத்தில் நாங்கள் உள்ளோம். சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் இரண்டு பிரிவு மக்களையும் பிரித்து பிரச்சனையை உண்டாக்குகின்றார்.
ஏதாவது தேவைக்காக சமுர்த்தி அலுவலகத்துக்கு சென்றாலும் அங்கு சமுர்த்தி உத்தியோகத்தர் அங்கு இருப்பதில்லை.
அதேவேளை, சமுர்த்தி உத்தியோகத்தருக்கு இடமாற்றம் கிடைத்தும் கூட அவர் செல்லாமல் இருக்கின்றார்” என்றனர்.