தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஒட்டகப்புலத்தில் அண்மையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட 234.83 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்டுள்ள பகுதியில் சுமார் 55 ஆயிரம் சதுர அடி காணியில் கண்ணிவெடிகள் இருக்கலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், யாழ்.மாவட்ட செயலகத்தால் உரிய தீர்வு காண்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் பத்தாம் (10) திகதி வரை விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு தற்காலிகமாக செல்ல வேண்டாம் என காணி உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கண்ணிவெடிகள் காணப்படும் பட்சத்தில் அவற்றை உரிய நடைமுறைகளை பின்பற்றி செயலிழக்கச் செய்யப்பட்டு அகற்றப்படவுள்ளன. அதன் பின்னர் குறித்த பகுதிகள் கண்ணிவெடி அற்ற பிரதேசமாக அறிவித்தல் விடுக்கப்பட்டதும் பொதுமக்கள் எவ்வித இடையூறும் இன்றி தங்களின் காணிகளுக்குள் செல்ல முடியும். பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், வசாவிளான் கிழக்கு(J/244), வசாவிளான் மேற்கு(J/245), பலாலி வடக்கு(J/254), பலாலி கிழக்கு(J/253), பலாலி தெற்கு(J/252) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்குட்பட்ட 234.83 ஏக்கர் காணி விவசாய நடவடிக்கையின் நிமித்தம் அண்மையில் விடுவிக்கப்பட்டது.