இந்திய முறையிலான அரசியல் தீர்வை முன்வைக்கும் வேட்பாளருக்கு ஆதரவளிக்க ஒன்றாக வேண்டும். அதற்காக எந்த தரப்புடனும் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கிற்கு வந்து 13ம் திருத்தம் தீர்வு என கூறும் போது, தெற்கில் இலங்கை எரியும் என்கிறார்கள். 13ம் திருத்தம், சமஸ்டி எனக் கூறுவதால் தெற்கில் எதிர்ப்புக்கள் அதிகரிக்கும் என்பதை அறியாத அரசியல் தலைவர்களாக உள்ளனர்.
இன்று பாராளுமன்றத்தில் உள்ளவர்களில் சிலர் தூக்கில் தொங்க வேண்டியவர்களும், சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர்களுமாக உள்ளனர். முள்ளிவாய்க்காலில் அப்பாவி உயிர்களை காப்பாற்ற வேண்டியவர்கள், இன்று நினைவேந்தல் செய்கின்றனர்.
பாராளுமன்றம் இறைமையை இழந்து பல ஆண்களாகிவிட்டது. வழக்கு தொடர்ந்தாலும் அதை எதிர் கொள்ள தயாராகவே இதை கூறுகிறேன். பாராளுமன்றம் இறைமை இழந்துள்ளது. அங்கு இருப்பவர்களில் சிலர் சிறையில் இருக்க வேண்டியவர்கள்.
அரசியலில் அனுபவம் இல்லாதவர்களால் பல சந்தர்ப்பங்கள் கைநழுவிப் போயுள்ளது. தமிழ், சிங்கள அரசியல்வாதிகளில் நான் மூத்த அனுபவம் உள்ள அரசியல்வாதி. இன்று பேசப்படும் அரசியல் தீர்வுகள் தீர்வாகாது.
இந்திய முறையிலான அரசியல் தீர்வே பொருத்தமானது. அந்த தீர்வுத்திட்டம் என்னால் எடுத்து செல்லப்பட்ட போது ஜனாதிபதி, அமைச்சர்கள், பெளத்த மதத் தலைவர்கள், சிங்கள தலைவர்கள், சிங்கள மக்களும் மற்றும் சர்வேதேசமும் ஏற்றுக் கொண்டது.
இந்த தீர்வுத் திட்டத்தை வெளிப்படையாக அறிவித்து போட்டியிடும் வேட்பாளரை ஒன்றாக சேர்ந்து ஆதரிப்போம். அதற்காக எந்த தரப்பாக இருந்தாலும் இணைந்து செயற்பட தயாராக இருக்கிறேன். மற்றபடி அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்கு எனது ஒத்துழைப்பு இருக்காது.
இன்று பொது வேட்பாளர் என பேசப்படுவது வாக்குச் சிதைவுகளை ஏற்படுத்துமேயன்றி வேறு எதையும் பெற்றுத்தராது”என்றார்.