இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய இழுவைப் படகை தடுத்து நிறுத்தக்கோரி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் முன்பாக மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று (18) காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் சேன் பொஸ்கோ பாடசாலைக்கு அருகாமைலிலுள்ள மருதடிச் சந்தியில் இருந்து, இந்தியத் துணைத் தூதரகம் வரை பேரணியாகச் சென்று, தூதரகம் முன்பாக கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களால், “இலங்கை கடற்படையே அத்துமீறலை தடுத்து நிறுத்து” , “கடற்தொழில் அமைச்சரே கண்ணை திறந்துபார்” ,
“இந்திய அரசே எம்மையும் வாழ விடு” , “சிறிலங்கா காவல்துறையே எங்களை தடுக்காதே “உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் அவர்களது கோரிக்கைள் அடங்கிய மகஜரொன்று மீனவர் சங்கப் பிரதிகளால் இந்தியத் துணைத்தூதரகத்தில் கையளிக்கப்பட்டது.