யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டுவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் கடற்படைக்கு காணி சுவிகரிப்பதற்கான அளவீட்டுப் பணிகள் நாளை(30) காலை 9.00 மணியளவில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், காணி சுவீகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“நாளை காலை 9.00 மணிக்குச் சுழிபுரத்தில் கடற்படைக்குக் காணி சுவீகரிப்பதற்காக அளவீட்டுப் பணிகள் இடம்பெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எமது மக்களுக்குச் சொந்தமான காணிகளைக் கடற்படைக்குச் சுவீகரிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எமது மண்ணைக் காக்க நாளை காலை சுழிபுரத்தில் அணிதிரளுமாறு தாயகத்தை நேசிக்கும் அனைவரையும் அன்புரிமையோடு அழைக்கின்றோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.