வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியை ஒருவர் தாக்கியதில் காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவன் நேற்று (3) பாடசாலை முடிந்து வீட்டிற்கு சென்ற போது அவரின் முகத்திலும், தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் விசாரித்த போது அவரது ஆசிரியை தாக்கியதாக தெரிவித்துள்ளான்.
இதனை தொடர்ந்து, சிறுவனின் தந்தை குறித்த ஆசிரியருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிறுவனை தாக்கியதற்கான காரணம் என்ன மற்றும் காலிற்கு கீழ் அடித்து இருக்கலாமே என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளித்த ஆசிரியை ‘உங்கள் மகனுக்கு அ, ஆ தெரியவில்லை என்றும் அதனாலேயே அடித்தது என்றும், அடிக்கும் போது சிறுவன் அங்கும் இங்கும் ஓடியதால் முகத்தில் அடிபட்டுவிட்டது என்று கூறியதுடன், மகனுக்கு அடிக்காமல் கொஞ்சுவதா? என ஆசிரியர் கேட்டுள்ளார்.
அத்துடன் இதனை கேள்வி கேட்கும் நீங்கள் நாளையுடன் பிள்ளையை வந்து கூட்டி சென்றுவிடுங்கள் என்று ஆசிரியர் பதில் அளித்துள்ளார்.
சிறுவனின் நெற்றியில் காயமும் தலை மற்றும் கண் பாதிப்படைந்துள்ளதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணைக்கும் உட்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.