கனடாவிற்கு சட்டவிரோதமான முறையில் போலியான
கடவுச்சீட்டை பயன்படுத்தி செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 27 வயதுடை இளைஞர் ஒருவரே இவ்வாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லை பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சவூதி அரேபியாவின் தம்மாம் நோக்கிச் செல்லவிருந்த சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-263 இல் செல்வதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
அதனை தொடர்ந்து, சவூதியில் இருந்து வேறு விமானம் மூலம் குறித்த இளைஞன் கனடா செல்ல திட்டமிட்டிருந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞருடைய கடவுச்சீட்டு கனேடிய வீசாவைக் கொண்டுள்ள மற்றுமொரு இலங்கையருடையது எனத் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், 18 லட்சம் ரூபாயை தரகர் ஒருவரிடம் கொடுத்து, தனது புகைப்படம் மற்றும் பிற அடிப்படைத் தகவல்களை கடவுச்சீட்டில் இணைத்து, இந்தக் கடவுச்சீட்டை போலியாகத் தயாரித்துள்ளதாக, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.