யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் இறங்கு துறை ஒன்றினை அமைப்பதுடன், இழுவைப்படகுகளினை தடை செய்ய வேண்டும் எனவும் கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(19) இடம்பெற்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை – பொலிகண்டி என்னும் இடத்தில் கடல்தொழில் உபநிலையம் ஒன்று இல்லை. அங்கு பெரும் எண்ணிக்கையானோர் கடல்தொழிலில் ஈடுபடுகின்றார்கள்.
விசேடமாக கடலின் ஆளத்தை ஒழுங்குபடுத்தி அங்கே ஒரு இறங்கு துறை ஒன்றினை நிர்மாணிக்கும் அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்ளப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. நான் அமைச்சருக்கு பிரேரிக்கிறேன். இது சம்பந்தமாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்க்கின்றேன்.
அதே, போன்று 2017 இன் 11 ஆம் இலக்க கடல்தொழில் நீரியல் சட்டத்தின் மூலம் இழுவைப்படகு தடை செய்யப்படுகிறது. குறிப்பாக இழுவைப்படகு மூலம் மீன் வளத்துக்கு அதே போன்று சமுத்திர சூழலுக்கு பாதகமான நிலை உருவாகியிருக்கின்றது.
கடல்தொழில் மேற்பார்வை குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை அதற்கான தீர்வு எடுக்கப்படவில்லை. இழுவைப்படகினை பயன்படுத்தி மீன்பிடியை நாடு முழுவதும் தடை செய்துள்ள நிலையில் இதனை அமுல் படுத்த நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்களா? யாழ்பாண பிரதேசத்தில் இழுவைப்படகுக்கு இடமளிக்கப்பட்டுள்ளதா? அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதா? அதனை அமுல் படுத்துகின்ற சந்தர்ப்பத்தில் அதிகாரிகள் ஏன் அமைதி காக்கின்றார்கள்? அவ்வாறு அமைதி காக்கப்பட்டிருந்தால் 2011 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க சட்டத்தை மீறித்தான் இதனை செய்கின்றீர்கள்” என்றார் –
எதிர்கட்சித் தலைவரின் கோரிக்கைக்க்கு பதில்வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
“இறங்கு துறை தொடர்பான கோரிக்கை இதுவரை என்னிடம் வரவில்லை. வான்தோண்டுதல் சம்பந்தமாகத்தான் கேட்டிருக்கிறார்கள். இம்முறை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடமாகாணத்துக்கென 500 மில்லியனை விசேடமாக ஒதுக்கியிருக்கின்றார். வான்தொடுதல் நடவடிக்கைகள் நடவடிக்கைகள் அடுத்தமாதமளவில் நடைபெறும்.
2018 ஆம் ஆண்டு இழுவைப்படகு தனிநபர் தனியார் சட்டமூலம் ஒரு தனி நபர் பிரேரணையாக கொண்டுவரப்பட்டு கடல் தொழில் பொறுப்பை எடுத்துக்கொண்டது. அப்பொழுது அந்த கடல் தொழிலாளர்களினுடைய எதிர்ப்பு அல்லது அவர்களினுடைய ஆர்ப்பாட்டங்கள் அல்லது அவர்களினுடைய கோரிக்கைகளை முன்வைத்ததனை அடுத்து அப்பொழுது ஒரு முடிவு எடுக்கப்பட்டது.
நாரா நிறுவனத்தின் ஆய்வுகளுக்கு பிறகு அது எந்தெந்த பகுதிகளில் செய்யலாம் என்று சொல்லி மித இழுவைப்படகுக்கு தான் அனுமதிக்கப்பட்டுள்ளதே தவிர எல்லா இடத்திலும் அல்ல. இருந்தும் உங்களினுடைய கேள்விகளினை கருத்தில் எடுத்து மீளாய்வு செய்கிறேன்” என்றார்.