“அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை, அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தை எடுக்கத் தயங்கப் போவதில்லை” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று(16) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட போதிலும் சுதந்திரத்தையும் கட்சியையும் இந்த அரசாங்கத்திற்கு காட்டிக்கொடுக்கவில்லை.
அதேவேளை பொதுத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் உட்பட எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக உள்ளது.
நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை கடுமையாக எதிர்ப்பதுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்களும் இதே கருத்தையே கொண்டிருக்கின்றோம்” எனவும் தெரிவித்தார்.